சந்திர யோகம்.

சந்திர யோகம்.
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.
சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும். சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும். ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரியகலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.
சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம். பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.
சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள் மேற்கூறியவாறு தியானம் செய்பவர்களுக்கு, பல்லாயிரம் ஆண்டு தவம் இருந்தர்க்கு காணக்கிடைக்காத சிவன், கண்ணாடியில் தெரியும் காட்சி போலதெளிவாகப் புலப்படுவார். அதாவது உயிருக்குள் உயிராய் இருக்கும் நிலை புலப்படும்.
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான்இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆகலாம். திருமந்திரம் - 591
கண்களிரண்டையும் புருவமத்தியில் வைத்து தியானித்தால், தேகம் வாடாது, உடல் அழியாது, பிராணன் இயங்காது, உலக உணர்வு அற்றுப் போகும், மலங்கள் நீங்கி சிவனாகவே ஆகலாம்.
பிராணயாமம் செய்து புருவமத்தியில்(நாசி நுனியில்) தியானம் செய்து, மேல் நோக்கி செல்லும் நாடிகள் இடை, பிங்கலை மூலம் அசைவற்று இருப்பவர்களுக்கு மரண பயம் கிடையாது. இதையே...
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்டு
உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரறா நாடியே தூங்க வல்லார்க்கு
பயனிது காயம் பயம் இல்லைதானே. திருமந்திரம் - 592. என்கிறார்.
ஆக்ஞா என்றால் அளவில்லாத சக்தி, ஆளுமை, கட்டுப் படுத்தும், தலைமை, அதிகாரமுள்ள எனப் பல பொருள் கொள்ளப் படுகிறது. இது ஒரு 6 வது உயர் நிலைச் சக்கரம். இந்தச் சக்கரம் வலுவடைந்தால் உடல், மனம், ஆன்மா மூன்றும் தூய்மையடைந்துவிடும். தேஜஸ் உண்டாகும். வசீகரம் ஏற்படும். எல்லாம் ஒன்றாகத் தோன்றும். அன்பு பெருகும். தீர்க்க தரிசனம் ஏற்படும். கூடுவிட்டு கூடுபாயும் சித்தி கைகூடும். பிற ஐந்து ஆதாரங்களைக் கடந்தவர்கள் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருமுறை ஆறாவது ஆதாரத்தில் நுழைந்தவர் மூண்டும் கீழ்நிலை ஆதாரங்களின் ஆதிக்கத்திற்கு செல்வதில்லை. இது இடைகலை, பிங்கலை நாடிகளுக்கு அப்பாற்பட்டு நேரடியாக சுழுமுனையோடு தொடர்பு கொணடுள்ளது. இந்த ஆதாரம் முழுமையாகச் செயல்படும் ஞானிகளின் உடலும், மனமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவர்களையே பரமஹம்சர் என்பார்கள். அவர்கள் நினைத்த காரியமெல்லாம் சித்தியாகும். விஞ்ஞான ரீதியாக நம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பி இந்த ஆக்ஞாவோடு தொடர்புகொண்டுள்ளது. பீனியல் சுரப்பி ஒளியினால் தூண்டப்படும் தன்மையுடையது. ஆறாவது ஆதாரம் வலுப்பெற்ற ஞானியர்க்கு தலையைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளி பீனியல் சுரப்பியைத் தூண்டி அதன் செயல்பாடுகளை வலிமைப்படுத்தும். 6 வது மற்றும் 7வது ஆதாரங்கள் ஓம் என்ற மந்திரத்தால் வலுப்பெறும். முழுமையாக வலுப்பெற்றவர்களுக்கு உச்சாடனம் தேவையில்லை. சதாகாலமும் அவர்கள் உடலில் இந்த மந்திரம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.ஒரு சிலரைத் தவிர, 35 வயதுக்கு மேல்தான் இந்த ஆதாரம் வலுப்பெறும். விஷுதியில் தூய்மையடந்து ஆன்மா, கர்ம வினைகள் அகன்று ஆக்ஞாவில் நுழைந்தவுடன் பரமாத்மாவாகிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக