பஞ்சபூதங்களும் இந்திரியங்களும்


 . அன்பிற்கினிய இராமனே!
மன்னனே! உடலின் தன்மையினைக் கூறுகின்றேன்.
கவனம் சிதறாது கேட்பாயாக!

உலகம் என்னிடமிருந்தே தோன்றுகின்றது;
என்னிடமே நிலை பெறுகின்றது.
இந்த உலகம் சிப்பியில் வெள்ளிபோல என்னிடமே ஒடுங்குகின்றது;
யாமோ நிர்மலமானவன்; பரிபூரணன்; சச்சிதானந்த சொரூபன்.

எதனிலும் சம்பந்தமில்லாதவனாகவும், அகங்காரமற்றவனாகவும், மாயையின் கலப்பற்ற பிரம்மமாகவும் அனாதியான அவித்தையோடு கூடியவானகவும் உலகங்களுக்குக் காரணமாயிருக்கும் தன்மையை அடைகின்றேன்.

எளிதில் அறிய இயலாததாகிய மிகப் பெரிய அவித்தையானது முக்குணங்களைக் கொண்டது.

அதன் குணங்களாக, ரஜோ குணம், சத்துவ குணம், தமோ குணங்களாக உள்ளன.

சத்துவ குணம் வெண்மையானது. இது மனிதர்களின் சுகத்திற்கும், ஞானத்திற்கும் இடமானது.

ரஜோ குணமானது செந்நிறமானது / சிவப்பானது. இது துக்கத்திற்கு இடமானது. நிலையற்றது. சலனப்பட்டுக் கொண்டேயிருப்பது.

தமோ குணமானது அசையாதது. கருப்பு நிறமானது. சுகம் முதலானவைகளைப் பொருட்படுத்தாதது.

எனது சேர்க்கையால், முக்குண வடிவமான மாயா சக்தியானது, அதிஷ்டானமாகிய என்னிடத்திலேயே, சிப்பியில் வெள்ளிபோலும், கயிற்றை பாம்புபோலவும் உலகத்தின் தன்மையை அடைகின்றது.

என்னிடமிருந்து மாயையால் ஆகாயம் முதலான பூதங்கள் உண்டாகின்றன. அந்த பூதங்களால் தான் உலகம் முழுதும் உண்டானது. இந்த உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது.

தாய் தந்தையர் சாப்பிட்ட உணவினால், ஆறு கோசமுள்ள உடல் உண்டாகின்றது.

சிறு நரம்புகள், எலும்புகள், மஜ்ஜைகள் தந்தையிடமிருந்தும்;
தோல், மாமிசம், இரத்தம் முதலானவை தாயிடமிருந்தும் உண்டானவை.

தந்தையிடமிருந்து உண்டானவைகளில் ஆறு வகைகள் இருக்கின்றன.
ரஸரஜங்கள் என்னும் ஏழும், ஆத்மஜங்கள் என்னும் ஏழும் அவ்வாறே ஸ்வாத்மஜங்கள் என்பவையும் ஆகும்,

முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள முடிகள் ( மீசை, தாடி, அக்குள் பிரதேசம் ) தலைமுடி, நகங்கள், பற்கள், வஸை என்னும் தாதுவும், சிரை, தமனி முதலியவைகளும் தந்தையிடமிருந்து உண்டாவன.

தாயிடமிருந்து இரத்தம், மேதஸ் என்னும் மாமிசப்பகுதி, எலும்பு நரம்புகளுக்கிடையே கெட்டியான திரவக் குழம்பாக இருக்கும் மஜ்ஜை ( இம்மஜ்ஜை தாய் , தந்தையிடமிருந்தும் ) உண்டாகின்றன. மேலும், வயிற்றின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் உள்ளதுமான பீலிஹம், யக்ருத் என்னும் மாமிசப் பகுதிகள், அபானம், மார்பில் தாமரை வடிவிலுள்ள இதயப் பகுதி, தொப்புள் முதலான மிருதுவான அம்ஸங்கள் அனைத்தும் தாயிடமிருந்து உண்டாகின்றன.

பிறக்கும் காலத்திலுள்ள பருமன், நிறம், வளர்ச்சி, பூரிப்பு, வலிமை, உறுப்புகளின் உறுதித் தன்மை, தாராள குணம், உற்சாகம், முதலானவை தாதுவின் தன்மையைப் பொறுத்தே உண்டாகின்றன.

விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், தர்மம், அதர்மம், மன நிலைகள், முயற்சி, அறிவு, ஆயுள், புலன்கள் இவையெல்லாம் ஜீவனால் உண்டாவன.

காது, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் ஐந்தையும் ஞானேந்திரியங்கள் என்றும்; அவைகளின் செயல்கள் முறையே சத்தம், தொடு உணர்ச்சி, உருவம், சுவை, வாசனை என்று சொல்லப்படுகின்றன.

வாய், கை, கால்கள், அபானம், குஹ்யம் இவை கர்மேந்திரியங்கள். இவைகளின் செயல்களாவன: பேசுதல், செய்தல், நடத்தல், விடுதல், ஆனந்தித்தல் என்பன.

மனம் இருவகையான இந்திரியங்களிலும் செயல்படுகின்றது.

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் நான்கும் அந்தக் கரணங்கள் என்றழைக்கப்படும்.

சுகமும் துக்கமும் மனத்தின் தன்மைகள். அதன் செயல்கள் நினைவு, பயம், நிச்சயமற்ற தன்மை ஆகியவைகளாகும் .

புத்தி நிச்சய வடிவமானது.

நான் , எனது என்னும் இவை அகங்காரம் எனப்படும்;

சித்தம் - சிந்திக்கின்ற தன்மை கொண்டது.

சத்துவம் என்றுக் கூறப்படும் அந்தக்கரணமானது குணங்களின் வித்தியாசத்தால் மூன்று வகையாக கொள்ளப்பட்டது. அவை:
1. சத்வ குணம் - மனம் அடங்கியிருத்தல் ; சுத்தம் ; தர்மத்தைச் செய்வதிலேயே நாட்டம் முதலான நல்லத் தன்மைகளால் ஆனது,

2. ரஜோ குணம் : - காமம், குரோதம் முதலான ராட்சஸத் தன்மைகளால் ஆனது.

3. தமோ குணம் :- தூக்கம், சோம்பல், அஜாக்ரதை, வஞ்சனை முதலிய தாமஸ குணங்களால் ஆனது தமோ குணமாகும்.

உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. ஆதலால் அவைகளின் குணங்களை இந்திரியங்களும் கொண்டிருக்கும்.

ஓசைக்கு செவி இந்திரியம். ஆகாயத்தின் நுண்மையான பலவிதத் தன்மைகள் உள்ளன. தைர்யம், பலமும் ஆகாயத்தின் தன்மைகளாகப் பெறப்படுகின்றன.

ஸ்பரிஸத்திற்கு தோல் இந்திரியம்.

உயரக் கிளம்புதல், கீழே இறங்குதல், குறுக்கே பாய்தல், நடத்தல், பரவுதல் என்னும் ஐந்து செயல்களும் வாயுவின் தன்மைகளால் ஆனவை.

பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் என்னும் பத்து வகையாக வாயு உடலினுள் இருக்கின்றது.

கடினமும் மென்மையும் வாயுவின் தன்மைகளாகும்.

இந்த வாயுக்களில் முக்கியமானது பிராணன். இதன் இருப்பிடம் வயிற்றுப் பகுதில் இருந்து கழுத்து வரை. வயிற்றிலும் இதயக் கமலத்திலும் சஞ்சரிக்கின்றது. மூக்குத் துவாரங்களின் வழியே உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு முதலியவற்றுக்கும், ஓசைகளை உச்சரிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.
அபானன் என்னும் வாயு ஆசனவாயிலும் குஹ்யத்திலும், இடை, முழங்கால், வயிறு, அடிவயிறு, துடைகளின் சந்தி, துடைகளில் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயலாவது கழிவுகளை - அதாவது திட, திரவக் கழிவுகளை, சிறு நீர் மற்றும் மலமாக வெளியேற்றுவதாகும்.

வியானன் என்னும் வாயு கண், காது, கணுக்கால்கள் முதலியவற்றிலும், நாக்கு மற்றும் மூக்கு முதலியவற்றிலும் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயல் - பிராணாயாமம், கும்பகம், ரோகம், பூரகம் முதலியனவாம்.

சமானன் என்னும் வாயுவானது நெருப்புடன் கூடியது. இது உடல் முழுவதும் வியாபித்து, 72,000 நாடித் துவாரங்களிலும் சஞ்சரிக்கின்றது. இதன் செயலானது உண்ட உணவின் சாரத்தை அருந்திய பொருளின் சாரத்தை கிரஹித்து உடலுக்கு புஷ்டியைக் கொடுக்கிறது.

உதானன் என்னும் வாயு கால்களிலும் கைகளிலும் அங்கங்கள் சேரும் இடங்களிலும் சஞ்சரிக்கின்றது. உடலை, எழுந்திரிக்கச் செய்தல், படுத்தல், குதித்தல் முதலிய செயல்களைச் செய்யவைப்பதாம்.

நாகன் முதலான மற்ற ஐந்து வாயுக்கள் உபவாயுக்களாகும்.

நாகன் என்னும் வாயு கழுத்திலிருந்து கொண்டு வாந்தியை உண்டு பண்ணும். கண்களினால் பார்க்கவும் செய்யும்.

கூர்மன் என்னும் வாயு கண்களிலிருந்து கண்களைத் திறக்கவும் மூடவும் செய்யும்.

கிருகரன் என்னும் வாயு பசி. தாகம், உண்டாக்குவதுடன் தும்மலை உண்டாக்கவும் செய்யும்.

தேவதத்தன் என்னும் வாயு கொட்டாவி விடுதலையும், சோம்பல் முறித்தல் செயலையும் செய்யவைக்கின்றது.

தனஞ்ஜயன் என்னும் வாயு சோகமடையச் செய்யும்.
கர்ப்பத்திலிருந்து சிசுவை வெளியில் தள்ளும்.
மரணமடைந்த சரீரத்தை விடாமல் சில மணி நேரங்கள் காத்து நிற்கும்.

அக்னியிடமிருந்து கண் என்னும் இந்திரியத்தையும், உருவத்தையும் , வெண்மை சிவப்பு என்னும் நிறங்களையும், ஜீரணம் செய்தலையும், பிரகாசத்தையும், பொறுமையின்மை, கொடிய தன்மைகள், இளைத்தல் முதலியவையையும், சக்தியையும் வெப்பத்தையும் பராக்ரமத்தையும் புத்திசாலித்தனத்தையும் கிரஹிக்கின்றது.

தண்ணீரிலிருந்து நாக்கு என்னும் இந்திரியத்தையும், ரசத்தையும், குளிர்ச்சியையும், அடர்ந்திருத்தலையும் திரவத் தன்மைகளையும், வியர்வையையும், உடல் மென்மையாக இருக்கும் தன்மைகளையும் கிரஹிக்கின்றது.

பூமியிலிருந்து மூக்கு என்னும் இந்திரியத்தையும், வாசனையையும், கனத்தையும் தைரியத்தையும் பருமனையும் அடைகின்றது.

தோல், இரத்தம், மாமிசம், மேதஸ் எனப்படும் வகை எலும்பு, மஞ்ஜை, சுக்கிலம் முதலானவை தாதுக்கள் எனப்படும்.

மனிதனால் உண்ணப்பட்ட உணவு ஜடாக்னியால் ஜீரணிக்கப்பட்டு மூன்று விதமாக மாறுகின்றது.
1. ஸ்தூலமான பகுதி மலமாக மாறுகின்றது.
2. ஸ்தூலமும் சூட்சுமமும் இல்லாத இடைப்பட்ட பகுதி தசையாக மாறும்.
3. சூட்சுமமான பகுதி மனதின் அம்சமாகும். ஆகையால் தான் மனமானது அன்னமயமானது என கூறப்படுகின்றது.

தண்ணீரினுடைய ஸ்தூல பாகம் சிறுநீராகின்றது. நடுப்பாகம் இரத்தத்தை அடைகின்றாது; நுண்ணிய பாகம் பிராணனை அடைகின்றது. ஆதலால், பிராணன் ஜலஸ்வரூபம் எனப்படுகிறது.

அக்னியின் ஸ்தூல பாகம் எலும்புகள் ஆகும். மத்திய பாகம் மஞ்ஞை என்னும் தாது ஆகும். நுண்ணிய பாகம் வாக்கு என்று கூறப்படுகின்றது.
ஆதலால் உலகமானது அக்னி, தண்ணீர் , அன்னம் இவற்றின் சொரூபமாக உள்ளது.

இரத்தத்திலிருந்து தசை உண்டாகின்றது.
தசையிலிருந்து கொழுப்பு உண்டாகின்றது.
கொழுப்பிலிருந்து எலும்புகள் உண்டாகின்றது.
எலும்பிலிருந்து மஞ்ஞை உண்டாகின்றது.
ரேதஸ் மஜ்ஜையிலிருந்து உண்டாகின்றது.
நாடிகள் மாமிசச் சேர்க்கையால் உண்டாகின்றது.

வாதம், பித்தம், கபம் முதலானவை தாதுக்கள் என்று சொல்லப்படுகின்றன.

நம் உடலிலுள்ள தண்ணீர் 10 உள்ளங்கை அளவிலானது.
உணவின் சாரம் 9 உள்ளங்கை அளவு.
இரத்தம் 8 உள்ளங்கை அளவு.
மலம் 7 உள்ளங்கை அளவு.
கபம் 6 உள்ளங்கை அளவு.
பித்தம் 5 உள்ளங்கை அளவு.
மூத்திரம் ( சிறுநீர் ) 4 உள்ளங்கை அளவு.
தண்ணீர் 3 உள்ளங்கை அளவு.
வஸை என்னும் மாமிஸத் திரவம் 2 உள்ளங்கையளவு.
மஜ்ஜை 1 உள்ளங்கையளவு.
சுக்கிலம் 1/2 உள்ளங்கையளவு. இந்த சுக்கிலமே பலமிக்கது.

உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை 360 ஆகும். இந்த எலும்புகள்
1. ஜலஜங்கள் - தாமரை போன்ற வடிவுடனிருப்பவை.
2. கபாலங்கள் - தலையிலுள்ள எலும்புகள்
3. ருசகங்கள் - மாதுளை போன்றிருப்பவை
4.ஆஸ்தரணங்கள் - ஆஸனம் போன்ற எலும்புகள்.
5. நளகங்கள் - கணுக்கால் எலும்புகளாகும்.

சரீரத்திலுள்ள சந்தி எலும்புகள் ( ஒன்றோடொன்று கூடுமிடத்தில் உள்ள எலும்புகள் ) எட்டு வகையாகும்.
1. ரௌரவங்கள் 2. பிரசரங்கள் 3. கந்த சேதனங்கள் 4. உலூகலங்கள் 5. சமுத்திரங்கள் 6. மண்டலங்கள் 7. சங்காவர்த்தங்கள் 8. வாமன குண்டலங்கள் என எட்டு வகையான சந்தி எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 210 ஆகும்.

ரோமங்கள் மூன்றரை கோடியாகும்.

தஸரதன் மகனே! இராமச்சந்திர மூர்த்தியே! என் பிரியமானவனே!
உடலின் சொரூபத்தினை உனக்கு விளக்கினேன்.

மூவுலகிலும் சாரமற்ற ஒன்று இந்த உடல்.
இதைவிட சாரமற்ற பொருள் வேறு எதுவும் கிடையாது.

அபிமானம் என்னும் கெட்ட அகங்காரத்தால், இந்த உடலை எடுத்தவர்கள், இப்போது நற்கதி அடையத்தக்க சிறந்த உபாயங்களைத் தேடுவதில் புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை.

இராமனே! சந்தேகம் என்னும் தீ உன்னுள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அறிய வேண்டியிருப்பின், மனதினுள் வையாது எம்மிடம் கேட்பாயாக!

தன் உள்ளத்தினை உணர்ந்த இறைவனின் கூற்றினைக் கேட்ட இராமரும் கேட்க ஆரம்பித்தார்.
சித்த யோக மார்க்கத்தில் பயணிக்கும் நன் மனது கொண்ட அன்பனே!

உன் குருநாதர் உனக்கு உபதேசித்த சித்தர்களின் வாக்கான “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு” என்பதனை நீ அறிவாய். இது உண்மையிலும் உண்மை!

அண்டத்தில் நவகோள்களில் ஒருவனாக, பூமிக்கு சக்தி அளித்து மனிதகுலத்தின், பூமியின் பரிணாமத்தினை இயக்குவதில் நானும் ஒரு பங்காளன்!

அதேபோல் பிண்டமாகி உன்னிலும் நான் இருக்கிறேன்! உன்னில் நான் இருக்கும் போது என்னை எண்ணி ஏன் பயப்படவேண்டும்! இது மனிதன் தான் யார் என்று அறியாமல் இருக்கும் அறியாமையில் வந்த பயம் அன்றி வேறில்லை!

மேலும் முற்காலத்தில் இந்த உண்மையை அறிந்த சித்தர்கள், ரிஷிகள் பாமரரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதை ரூபமாக எழுதியதை கதையில் உள்ள கருத்தை புரிந்து கொள்வதை விட்டு விட்டு மக்களை பயமுறுத்த தொடங்கி விட்டனர்!

நான் முன்னர் கூறியபடி உன்னில் நான் இருக்கிறேன்! நான் மட்டுமல்ல! நவகோள்கள்! நட்சத்திரங்கள்! என பிரபஞ்ச சக்திகள் அனைத்துமே இருக்கின்றன! இறைவனின் படைப்பில் இவற்றை பெற்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு படைக்கப்படுள்ளான்!

மனிதன் அடிப்படையில் செயலாற்றுவதற்கு ஒன்பது வகையான பிரபஞ்ச அடிப்படை சக்திகள் தேவைப்படுகிறது! அவற்றை தருபவற்றை நவகோள்கள் என்கிறார்கள்.

இந்த சக்திகளை பெறும் மனிதன் தனது மனத்தின் மூலம் அவற்றை நல்லதாகவோ, தீயதாகவோ சமைத்துக்கொள்கிறான்! இதனை நீ தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்!

நவகோள்களான நாம் நன்மையினை, தீமையினை நாமாக வழங்குவதில்லை! நீங்கள் உங்கள் மனதினால் சமைக்கும் எண்ணங்களை தகுந்த நேரத்தில் செயற்படுத்துவோம்! இப்படி செயற்படுத்துவதில் ஒவ்வொரு நவகோள் நாயகர்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது!

எனது தனித்தன்மை என்னவென்றால் நல்லெண்ணம், தெய்வ பக்தி, தூய மனம் உடைய ஒருவனுக்கு அவன் செய்யும் செயலுகான பலனை பலமடங்காக எனது சக்தி மூலம் பெருக்கி கொடுப்பேன்!

அதேபோல் ஆணவம், வஞ்சனை, சமூகத்திற்கு விரோதமான செய்கை செய்பவர்கள் போன்றோருக்கும் அதேவிதியினை பின்பற்றி பலன் கொடுப்பதில் வஞ்சனை செய்வதில்லை!'

ஆகவே நல்லெண்ணமும், தூய மனது கொண்டவனும் என்னை நினைத்து அஞ்சத்தேவையில்லை! இப்படி பயந்த எண்ணங்களை எடுப்பதால் பலர் நன்மைகள் செய்தும் தீயபலனை அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்! ஏனெனில் மனிதர்களாகிய நீங்கள் மனதில் எதை விதைக்கிறீர்களோ அவற்றை பெருக்கி உங்களுக்கு தரும் சக்திகளே நாம் அன்றி எமக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை!

என்னை மந்தன் என்றும், நொண்டி என்றும் கூறுவார்கள்! இதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்! இந்த சூரியமண்டலத்தில் மெதுவாக சுழல்பவன் என்பதனை பாமரர்கள் விளங்க குறித்த சொற்கள் அவை! வேகமாக ஓடுபவன் கண்களில் சில விடயங்கள் தப்பிவிடும் அனால் மெதுவாக நடப்பவனால் பலத்தை அவதானிக்க முடியும், அதுபோல் மனிதரது எண்ணம், செய்கை என்பவற்றில் விதைத்ததற்கான பலனை தருவதில் நிச்சயமானவன் நான்!

எனது சக்தியினை அதிகம் பெற்றவன் உலக மாயையில் இருந்து வெளிப்பட்டு பேருண்மையினை அறியும் ஆற்றல் உள்ளவனாவான்! பிரபஞ்ச உண்மைகளை அறிய ஆர்வம் கொண்டவனும், நிமிடத்திற்கு நிமிடம் கற்கவேண்டும் என்று உன்னைப்போல் ஆர்வம் கொண்டவனும் எனது சக்தியினை அதிகம் பெற்றவர்கள்!

எனது சக்தி ஒவ்வொருவனுக்கும் அவனது உண்மை தன்மையினை உணர்த்தும்! எப்படி என்றால் பல நேரங்களில் அவன் மனதில் விதைத்ததை அவனாலேயே அறிய முடிவதில்லை! அதற்கான பலனை இன்பமாகவோ துன்பமாகவோ நான் தரும்போது அவன் எதை விதைத்தான் என்பதனை அறிவித்து ஞானம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுதுகிறேன். ஆனால் மனிதர்களது மனநிலை ஏற்பு இல்லாததால் அவர்கள் அவற்றை பெறுவதில்லை.

அன்பனே, ஒருவிடயத்தினை புரிந்து கொள்! எனது பாதிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது! ஆனால் நான் தருவது நல்லதா? கேட்டதா? என்பது எப்போதுமே உனது தெரிவு அன்றி எனது விருப்பம் அல்ல!

உண்மைகளை கடுமையாக சொல்லி அனுபவத்தினை கொடுத்து ஞானத்தினை பெறவைக்கும் மனித உடல் தாங்கிய குருவில் எனது இந்த சக்தி செயற்படுகிறது.

மேலே நீ கேட்ட பரிகாரங்கள், பூஜைகள், யாகங்கள் என்பன தன்னை அறிந்த ஞானம் பெற்ற ரிஷிகள் எனதும், மற்றைய கோள்களின் சக்திகளை ஈர்பதற்கு ஏற்படுத்திய வழிகள்! இவற்றை எவ்வளவு செய்தாலும் நீ உன்னில் விதைத்ததை தான் பெறுவாய் என்பதனை நினைவில் கொள்!

ஆகவே உனக்கு துன்பம் ஏற்படும் போது யாரையும், எதனையும் குறை சொல்ல வேண்டாம், உனது இதயத்தினை திறந்து என்னை குருவாக தியானித்து அந்த துன்பத்திற்கு காரணமான எனது செய்கை, எண்ணம் என்ன என்பதனை தியானி! உனது ஆழ்மனம் மூலம் அது உணரவைக்கப்படும்! அதன்பின்னர் அத்தகைய செயலை எண்ணத்தினை நான் எடுக்க மாட்டேன் என்ற உறுதியினை எடுத்து மனதில் அன்பு, பரிவு, பாசம் போன்ற நல்ல எண்ணங்களை விதை! நன்மை பெறுவாய்!
இப்படி கணத்திற்கு கணம் தன்னை திருத்திக் கொண்டு ஞானத்துடன் வாழ்பவனுக்கு எனது சக்தி நன்மையினை அளிக்கும்.

பயத்துடன், சுய ஒழுக்கம் இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு அவர்கள் உள்ளிருப்பவற்றை வெளிப்படுத்துவேன்!
ஆகவே எனது சக்தி நன்மை செய்ய வேண்டுமா, தீமை செய்ய வேண்டுமா என்பது எப்போதும் உன்னிடமே உள்ளது என்பதனை அறிந்து மனதில் நல்லெண்ணங்களையும் நற் செய்கைகளையும் விதைத்து வா! நன்மை பெறுவாய்!
உண்மையை அறிந்து உயர்வு பெற ஆசிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக